Wednesday, December 31, 2014

திருவெம்பாவை பாடல் - 16 (திருவண்ணாமலையில் அருளியது)

.
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்


மழையே ! இந்தக் கடலில் உள்ள நீரின் ஆவியாய்த்
திரண்டு வானில் எழுந்து, உடையவளகிய உமையம்மையைப்
போல் (கார் நிறத்தில்) திகழ்க ! எங்களை ஆளுடைய அவளின்
மெல்லிய இடை போல மின்னைலாய்ப் பொலிக ! எம்பிராட்டியின்
திருவடியில் திகழும் பொற்சிலம்பின் ஓசை போல (இடியாய்) ஒலிக்க !
அவளுடைய திருப்புருவம் வளைந்தது போல வான்வில்லாய் வளைக !
நம்மை ஆளுடைய அவளோடு எப்போதும் பிரிவின்றி விளங்கும்
எம்பிரானாகிய சிவபெருமானுடைய அன்பர்களுக்கு, முனைப்போடு
தான் வந்து அவள் விரைவாகவே அளிக்கின்ற இனிய அருள்
என்பது போலப் பொழிக !

இட்டிடை - சிறிய இடை; சிலை குலவுதல் - வில்லென வளைதல்;
முன்னி - முற்பட்டு.

Thanks:
http://www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm

Regards
P Renjith Kumar

No comments: